வண்டிக்கும் வாந்திக்கும் ஏதோ தொடர்பு இருப்பதை அவன் அடிக்கடி பயணங்களில் உணர்ந்து கொண்டிருந்தான். திடீரென்று அடி வயற்றிலிருந்து தூக்கி கழுத்து வழியாக வெளியேற துடிக்கும் உணர்வு ஏற்ப்பட்டது. வண்டியில் வாந்தி எடுத்தால் அதைப் போல் அசிங்கமான ஓன்று இல்லை. சுற்றி ஒருமுறை வண்டியைப் பார்த்தான். “இந்தியா வல்லரசு ஆகுமுன் செல்லரசு ஆகியாச்சு” என்பதை உணர்ந்தான். எல்லோரும் கையில் செல்போனை நொண்டிக் கொண்டிருந்தனர்.
வண்டியில் ஆண்களை விட பெண்களே அதிகம் இருந்தனர். பளபளப்பான பட்டு புடவைகளும், நகைகளுமாய் உற்சாகமாய் இருந்தனர்.
“இந்த பொண்ணுங்க விரதத்தின் மூலம் தங்களோட அன்பை காட்டி விடுவாங்க. ஆனா ஆணுங்கதான் பாவம் புடவை, நகை, மேக்கப் சாதனங்கள்ன்னு பல விதங்களில அன்பை காட்ட வேண்டியிருக்கு” என நினைத்து கொண்டான்.
வாந்தி வந்து முட்டிக்கிட்டு நிக்கிறப்ப தான் இப்படிப்பட்ட யோசனையா என தன்னையே நொந்து கொண்டான். பேசாம குழந்தையா பொறந்திருக்கலாம், வண்டியிலே வழியிலோ நெனச்ச இடத்தில வாந்தி எடுக்கிறதுக்கான மிகப் பெரிய சுதந்திரமாவது கிடைத்திருக்கும். இன்னும் கடைக்கு போக எவ்வளவு தூரம் இருக்கிறது என தெரியவில்லை. தூரம் தெரிஞ்சா அதுவரைக்கும் வர்ற வாந்தியை அடக்கி வைக்க முடியுமான்னு யோசித்தான்.
“சார் அடையார் போக இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு” அருகே இருந்த மனிதரிடம் கேட்டான். “தெரியல்ல” என போனில் கேம் விளையாடிக் கொண்டே அந்த பெரியவர் பதில் சொன்னார். போன்களால் முகத்தைப் பார்த்து பேசும் மனித இயல்பு கூட இன்று காணாமல் போய்விட்டது.
“வண்டிய இப்படி போட்டு இழுக்கிறானே ......இவன் பொண்ணு ஓடிப் போனா வண்டிய இப்படிதான் ஓட்டி போய் பிடிப்பானா” தேவையில்லாமல் மனசுக்குள் கோபம் வந்தது. திடீரென மீண்டும் வாந்தி வரும் உணர்வு.....நெஞ்சை வேகமாக தடவி விட்டான். வயிற்றையும், சுவாசத்தையும் இறுக்கி பிடித்தான். வாயை இறுக்கமாய் மூடிக் கொண்டான். வரும் வாந்தியை என்ன செய்வது என தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
ஒரு வேளை வண்டியில் தவறி வாந்தியெடுத்தால் மற்றவர்கள் அதை பார்க்கும்போது வரும் அருவருப்பை உணர முடிந்தது. ஆலோசித்ததில் கையில் சாதனங்கள் வைத்திருந்த கவரை எடுத்து அதில் வாந்தியை பிடித்து ரோட்டில் வீசலாம் என தோன்றியது. இருப்பினும் வண்டியில் இருப்பவர்கள் யாரேனும் அதனை கவனித்தால்.......டீசென்சி என்ன ஆவது?
நேரம் ஆக ஆக நெருப்பில் இருப்பதை போல ஒரு பீலிங். இனியும் தாக்கு பிடிக்க முடியுமா என தெரியவில்லை. ஒரு வேளை தனது கட்டுபாட்டை மீறி வண்டிக்குள்ளே வாந்தி எடுத்து விட்டால்........? அப்படி நினைத்த உடனே சிறுநீர் கழிப்பதற்கான உணர்வும் தோன்ற தொடங்கியது. இது என்ன புது பிரச்சனை? நகர பேருந்துனுள் ஒரு குட்டி நகரம்......
இரு பிரச்சனையும் சேர்ந்ததால் அவற்றின் வேகம் அதிகரிக்க துவங்கியது. யார் முதலில் வெளியே வருவது என்ற பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழித்தது மனித உடலே. இனி முடியாது என்ற நிலையில் தொண்டைகுழி அழுத்த, வயிறு உள்ளே தள்ள வாயை பொத்தியவாறு ஒரு சத்தம் வந்தது. வாந்தி என பயந்த வேளையில் சாதரணமாய் வெளியே சென்றது புளித்த ஏப்பம்........
எழுத்து: Dino LA